எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை அரசு மருத்துவர்களுக்கு வழங்குக - ஓ.பன்னீர்செல்வம்

டெல்லி, எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை அரசு மருத்துவர்களுக்கு வழங்குக - ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

முந்தையை திமுக ஆட்சிக் காலத்தில் 2009-ம் ஆண்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் காலவறையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டபோது, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை நேரில் சந்திந்து ஆதரவு தெரிவித்ததோடு, தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்தும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெய்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தி.மு.க. அரசோ, வாக்குறுதியையும் நிறைவேற்றமாட்டோம், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுரையையும் செயல்படுத்தமாட்டோம் என்ற மன ரீதியில் இறுமாப்புடன் செயல்பட்டு வருவதும், கொரோனா காலத்தில் தங்கள் உயிர்களை பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட அரசு மருத்துவர்களை நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற வைப்பகும் ஜனநாயகத்திற்கும், இயற்கை நியதிக்கும் எதிரான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது.

கார் பந்தயம், 133 அடி பேனா சிலை, நாணய வெளியீடு என பணத்தை வீணடிக்கின்ற தி.மு.க. அரசுக்கு 19,000 அரசு மருத்துவர்களுக்கான ஊதிய மற்றும் பதவி உயர்வு ஆணையை நடைமுறைப்படுத்துவதில் என்ன தயக்கம் என்று அரசு மருத்துவர்கள் கேட்கிறார்கள். எனவே அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்துதல் அல்லது எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் ஆகியவற்றில் எது அரசு மருத்துவர்களுக்கு சாதகமாக உள்ளதோ அதளை செயல்படுத்த தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com