பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை

ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை
Published on

பழவேற்காடு,

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்து உள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில், பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும் பழவேற்காடு கடல் பகுதியில், குறிப்பிட்ட சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த சூழலில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை அதிகாலை 6.23 மணிக்கு என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.

இந்த நிலையில், ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com