பேரம்பாக்கம், மப்பேடு சுற்றுவட்டாரங்களில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்

பேரம்பாக்கம், மப்பேடு சுற்றுவட்டாரங்களில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு அபராத தொகையாக ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் விதிக்கப்பட்டது.
பேரம்பாக்கம், மப்பேடு சுற்றுவட்டாரங்களில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்
Published on

சென்னை வடக்கு இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றொரு மோகன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் மற்றும் மப்பேடு போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்தனர். அதில் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றியதாக 2 கனரக வாகனங்கள், அதிக ஆட்களை ஏற்றி சென்ற 7 தனியார் தொழிற்சாலை வாகனங்கள், மற்றும் ஆட்டோ ரிக்ஷா, வேன், உள்ளிட்ட வாகனங்கள் தணிக்கை செய்யபட்டு, 24 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அதில் 6 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு மப்பேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதில் அபராத தொகையாக ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் விதிக்கப்பட்டது.

மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் இயக்கப்படும் தனியார் கம்பெனி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு தணிக்கை அறிக்கை வழங்கப்படும் என்று திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மோகன் வாகன ஓட்டிகளை எச்சரித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com