மருத்துவ படி-குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள்

மருத்துவ படி-குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மருத்துவ படி-குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள்
Published on

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் திருச்சி மண்டல கூட்டம், பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மண்டல தலைவர் மாணிக்கம் ராமசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் ஆதிசிவம் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்துசாமி கடந்த மண்டல கூட்டத்தின் அறிக்கையையும், தீர்மானங்களையும் வாசித்து ஒப்புதல் பெற்றார். மாவட்ட செயலாளர் மருதமுத்து வரவேற்றார். 80-வது வயது தொடங்கும் நாள் முதலே ஓய்வூதியர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியமும், 70-வது வயது ஆரம்பிக்கும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் பெறும் வகையிலும் அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியை ரூ.1,100 ஆக உயர்த்தியும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தியும் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழக அரசின் 8-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவை தொகையை அனுமதித்து வழங்க வேண்டும். கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப் முதலிய மாநிலங்களில் ஓய்வூதியர்கள் பெறும் கம்யூடேஷன் தொகைக்கான பிடித்தத்தை 12 ஆண்டுகளில் நிறுத்தப்படுவதை போன்று தமிழக அரசும் நடைமுறைப்படுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் பயன்களை அதே நிலையில் உள்ள அனைவருக்கும் பொருந்துமாறு பொது அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com