புதிய பள்ளிக்கட்டிடம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

நரிக்குடி அருகே புதிய பள்ளிக்கட்டிடம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பள்ளிக்கட்டிடம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
Published on

நரிக்குடி அருகே அகத்தாகுளம் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தநிலையில் பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் மாணவர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது.

மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் புகுந்து மழையில் நனைந்தபடி படித்து வந்தனர். இதனால் பிள்ளைகளின் உயிருக்கு பயந்து பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கி வந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டி பொதுமக்களும், பெற்றோர்களும் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்களுடன் சேர்ந்து திருச்சுழி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விடத்தக்குளம் பஸ் நிறுத்தம் முன்பு நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நரிக்குடி போலீசார், கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அகத்தாகுளம் தொடக்கப்பள்ளிக்கு புதிய பள்ளிக்கட்டிடம் கட்டுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com