நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் குடும்பத்துடன் குவியும் மக்கள்

வார விடுமுறையான நேற்று ஒரே நாளில் பொருநை அருங்காட்சியகத்தை 11 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் குடும்பத்துடன் குவியும் மக்கள்
Published on

நெல்லை,

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு, தமிழ்நாட்டின் தொன்மையையையும், தமிழர்களின் நாகரிகத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் நெல்லை பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கடந்த 20-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். தொடர்ந்து கடந்த 23-ந்தேதி அருங்காட்சியம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. மேலும் மக்கள் எளிதாக செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்கள் எதிர்பார்த்ததை விட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் அருங்காட்சியகத்துக்கு வருகிறார்கள். திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வரும் நிலையில், 5-வது நாளான நேற்று முன்தினம் அதிகபட்சமாக 8,700 பேர் பார்வையிட்டனர். மொத்தமாக கடந்த 5 நாட்களில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டனர்.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களும் தங்களது குடும்பத்தினருடன் அருங்காட்சியகத்தில் குவிந்தனர். அங்குள்ள ஒவ்வொரு கட்டிடத்திலும் வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள், எல்.இ.டி திரைகள், பிரமாண்ட 5-டி, 7-டி தியேட்டர்கள் என அனைத்தையும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். பார்வையாளர்கள் வருகை அதிகரிப்பால் ஒவ்வொரு கட்டிட தொகுதிகளின் முன்பும் நீண்ட வரிசையில் நின்று தொல்பொருட்களை பார்வையிட்டனர். நேற்று ஒரே நாளில் பொருநை அருங்காட்சியகத்தை சுமார் 11 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட குவிந்த மக்கள், அருகில் உள்ள பிரமாண்ட வரையாடு சிலை மற்றும் மலையின் குறுக்கே வெட்டி அமைக்கப்பட்ட நான்குவழிச்சாலை போன்ற இடங்களையும் பார்த்து ரசித்தனர். ஆங்காங்கே குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com