

சென்னை,
சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அரசியலை வியாபாரமாகவே செய்துவரும் தானியங்கி விற்பனை இயந்திரம் (Vending machine) தி.மு.க. இப்போது தன் கட்சியின் ஆபாச பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருகிறது. கேட்டால், அதுதான் எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று எகத்தாளம் பேசுகிறது.
மேல்மட்ட தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று அநாகரிக அரசியல் புரிந்து வருவதை நம் தமிழக மக்களும் தினம் தினம் பார்த்தே வருகின்றனர். ஆனால், வழக்கம்போல மக்களை மறந்து தான் என்ற திமிரில் தி.மு.க. வழக்கம்போல அராஜகம் செய்து வருகிறது.
ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு, ஜனநாயக பண்புகள் அறவே இன்றி தி.மு.க. செயல்பட்டதால்தான் அவர்கள் இப்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறார்கள். (now they are enjoying the consequences). இருந்தும், அதிகார மமதை இன்னும் தலையை விட்டு இறங்காமல், இப்போதும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டி அறிக்கை விடுகிறார் ஸ்டாலின் சார். சத்திய ஆட்சி எது?. சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என்பது ஸ்டாலின் சாருக்கே தெரியும்.
அடிப்படை புரிதல்கூட இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வழக்கு போட்டதால், ஒழுங்காக படித்துவிட்டு வாருங்கள் என்று சுப்ரீம் கோர்ட் ஓங்கி அடித்ததை மறந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்ய தொடங்கிவிட்டனர் தீயசக்தி தி.மு.க.வினர். நீதிநெறி மறந்து அரசியல் தானியங்கி விற்பனை இயந்திரம் (Vending machine) ஆன தி.மு.க. விதைத்து வருகிற வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.