

சென்னை,
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு இன்று முதல் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:-
" சென்னையில் சுமார் 1,800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம். அவர்கள் அடையாள அட்டை எதனையும் காண்பிக்க தேவையில்லை. ஏற்கனவே வாங்கிய ரூ.1000 பஸ் பாஸ் ஜூலை 15ம் தேதி வரை செல்லும்.
பேருந்துகளில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தங்களின் அடையாள அட்டையை காண்பித்து பேருந்தில் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம். அந்தந்த பகுதிகளை பொறுத்து தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பேருந்துகள் தேவைப்படும்பட்சத்தில், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்.
பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும். இதனை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கண்காணிக்க வேண்டும் " என்று கூறினார்.