18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்க தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பலர் பணத்தை இழக்கும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகின்றன. மேலும் அதிகப்படியான பணத்தை இழப்பதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு களை ஒழுங்குபடுத்தும் வகையில் கடுமையான விதிகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பங்கேற்கும் சிறார்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 'ஆன்லைன் உண்மையான பண விளையாட்டு' என்பது, தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021-ன்படி, 'வெற்றிகளை' சம்பாதிக்கும் எதிர்பார்ப்புடன் ஒருவர் பணம் அல்லது பொருளை டெபாசிட் செய்யும் விளையாட்டு என வரையறுக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டில் ஒரு வீரரின் செயல் திறனின் அடிப்படையில் 'வெற்றிகள்' பணமாகவோ அல்லது பொருளாகவோ பரிசுகளை வழங்குகின்றன அல்லது விநியோகிக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் தெளிவுபடுத்தி உள்ளன.

தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையில், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், பதிவு செய்வதற்கும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இப்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு இப்போது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் பண விளையாட்டுகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும். நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் பணம் கட்டி சிறார்களை விளையாட அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயம் ஆகும். இந்த திருத்தப்பட்ட விதிகள் தமிழ்நாட்டில் இப்போது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பணம் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் உள்நுழைவு பக்கத்தில் தொடர்ச்சியான எச்சரிக்கை செய்தி காட்டப்பட வேண்டும் என்று அதில் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளது.

இதன்படி புதிய விதிகள் மூலம் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com