மக்களுக்கு விஜய் மீதான நம்பகத்தன்மை குறையும்: துரை வைகோ

விஜய்க்கு பின்னால் இளைஞர் பட்டாளம் உள்ளது என்று துரை வைகோ கூறினார்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சகோதரர் விஜய்யை பொறுத்தவரை அவர் எதிர்க்கட்சியாக செயல்பட நினைக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. படித்தவர், அவர் பின்னால் இளைஞர் பட்டாளம் உள்ளது. பொத்தாம் பொதுவாக அவர் அனைவர் மீதும் குற்றச்சாட்டு கூறுவது சரி அல்ல. முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து அவர் கூறுவது ஏற்புடையது அல்ல.
எந்தெந்த நிறுவனங்களில் எல்லாம் முதலீடு செய்யப் போகிறார்கள், எங்கு அந்த முதலீட்டை செய்யப்போகிறார்கள் என்ற தரவுகளுடன் தான் முதல்-அமைச்சர் பதில் கூறியுள்ளார். ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகள் வருவதற்கு உண்டான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அது எந்தெந்த தொழில் நிறுவனங்கள் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
இருந்தும் விஜய், முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சனம் செய்திருப்பது அவருடைய தகுதிக்கு நல்லதல்ல. இது மக்களிடம் அவர் மீதான நம்பகத்தன்மையை குறைக்கும். அதிமுக- பாஜகவை பொறுத்தவரை அவர்கள் திடீரென கூட்டணி சேருகிறார்கள். திடீரென அந்த கூட்டணியில் பலர் வெளியே செல்கிறார்கள். இதுகுறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






