

பெரம்பலூர்,
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, தவெகவுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெற்ற விசிகவை திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சமூகவலைதளத்தில் அவதூறாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.
விசிகவை விமர்சித்த ஆ.ராசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பஸ் நிலையத்தில் நேற்று விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், கட்சியினர் பஸ் நிலையத்தில் திரண்டனர். அப்போது விசிகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்கள், கட்டைகளை கொண்டு தாக்கினர். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், இரு தரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டினர்.
இந்நிலையில், பெரம்பலூரில் திமுக - விசிகவினர் இடையே நேற்று நடந்த மோதல் தொடர்பாக 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.