பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
Published on

சென்னை,

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். கோ.க.. அருண்ராஜ், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார். ரா ஆகியோர் இன்று (15.9.2026) சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அருகில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு

பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரத்தில் நடராஜர் – பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு 15.09.1909 அன்று மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து சிறந்த மாணவராகவும், எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல் வாதியாகவும், சீரிய தலைவராகவும் திகழ்ந்தார். தனது பேச்சாற்றல் மூலம் மக்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியதுடன், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்கின்ற கோட்பாட்டை மக்களிடையே கொண்டு சென்றார். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத்தந்த மாபெரும் தலைவர் ஆவார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், தனது ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் அடையும் வகையில் சிறப்பான பல திட்டங்களை வழங்கி ”ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்” என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். தாய் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக, ”சென்னை மாகாணம்” என்று அழைக்கப்பட்டு வந்ததை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தார்.

1967-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயரை ‘தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என மாற்றம் செய்தார். 1968-ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியதுடன் கல்வியில் தமிழுக்கு முதலிடம் வழங்கினார்.

வாய்மையே வெல்லும்

தமிழ்நாடு அரசின் முத்திரையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆப் மெட்ராஸ்’ என்ற ஆங்கில வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழ்நாடு அரசு’ என மாற்றினார். தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் அரசு முத்திரையில் ‘வாய்மையே வெல்லும்’ என்ற சொல்லை இடம் பெறச் செய்தார். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் பேரறிஞர் அண்ணா மறைந்தும், மக்கள் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com