கிரிக்கெட் சூதாட்டம், ஆபாச இணையதளங்களுக்கு நிரந்தரத்தடை -சரத்குமார் வலியுறுத்தல்

கிரிக்கெட் சூதாட்டம், ஆபாச இணையதளங்களுக்கு நிரந்தரத்தடை -சரத்குமார் வலியுறுத்தல்.
கிரிக்கெட் சூதாட்டம், ஆபாச இணையதளங்களுக்கு நிரந்தரத்தடை -சரத்குமார் வலியுறுத்தல்
Published on

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் என்பவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட செயலியால் சுமார் ரூ.90 லட்சம் இழந்த வேதனையில் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி வேதனையளிக்கிறது. சூதாட்டத்துக்கு தடை என்று சொல்லும்போது, அனைத்துவித ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதிக்கவேண்டும். இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் ஆபாச இணையதளங்களையும் முடக்கவேண்டும். மத்திய கிழக்கு நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், அமீரகம், சவுதி அரேபியா, சிரியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆபாசப்பட இணையதளங்கள் உள்ளிட்ட பல இணையதளங்களை பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாத வகையில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செயல்படுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் விதியும் நடைமுறையில் உள்ளது.

அதுபோன்று இந்தியாவிலும் தீவிரமாகக் கண்காணித்து, தடைசெய்வது மிகுந்த அவசியம். மாநிலங்களுக்குள் செயலிகளுக்கு தடை என்றிருந்து, மத்தியில் செயலிகளுக்கு அனுமதி என்றிருந்தால் பயன் கிடையாது. எனவே, அனைத்துவித ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கும், ஆபாச இணையதள செயலிகளுக்கும் நிரந்தரத்தடை விதிக்க மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவெடுத்து முழுமையான தீர்வு காணவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com