குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை குற்றாலம் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று சுதந்திர தினம் என்பதால் விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . பிரதான அருவி , ஐந்தருவி , சிற்றருவி , புலியருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






