

சென்னை,
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.
தென்காசி, குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் குளிர்ந்த காற்று பலமாக வீசியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு 2-வது ஆண்டாக தற்போது தடை அமலில் உள்ளது. இந்த சூழலில் குற்றாலம் அருவிகளில் வரும் 1-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி என்ற தகவலில் உண்மையில்லை என்று தென்காசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், குற்றால அருவிகளில் குளிப்பதற்காக தடை தொடருகிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை. அதனை நம்பி யாரும் வர வேண்டாம். அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும்போது முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.