சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி - அறநிலையத்துறை அறிவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி - அறநிலையத்துறை அறிவிப்பு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்வதற்கு, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது தடை விதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகும், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. இருப்பினும் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கவில்லை என பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவின்படி, சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலபூஜை முடிந்த பிறகும், முதல் 30 நிமிடத்திற்க்கு தேவார திருவாசக திருமுறைகளை ஓதி வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தேவாரம், திருவாசகம் பாட கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவாரம், திருவாசகம் பாடுவது பிற பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையிலும், திருக்கோவிலின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com