

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. அரசு விடுமுறை நாட்கள் போக மீதியுள்ள 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட் டன. இந்த 4 நாட்களில் மொத்தம் 7 ஆயிரத்து 599 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 918 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 2.365 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 11 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்ததாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக அந்தந்த தொகுதிகளின் வாக்காளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதைபோல பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாக்கல் செய்த வேட்புமனுவிலும் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.