ரோடு ஷோவுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க கோரிய மனு; சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அனைத்து அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரோடு ஷோவுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க கோரிய மனு; சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
Published on

சென்னை,

கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், த.வெ.க. தலைவர் விஜய், குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காதபடி, அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும். நெறிமுறைகளை மீறும் பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட கட்சி தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கக்கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். கரூர் துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி என். செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com