

சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று (11.03.2026) அதிகாலையில், காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் எம்.பி.யின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதும் ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அதனை வன்முறை மூலம் வெளிப்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இப்படிப்பட்ட தாக்குதல்கள் சட்டம்-ஒழுங்கை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக அரசியல் மரபுகளையும் பாதிக்கக்கூடியவை.
இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காவல்துறை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.