

சென்னை,
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்திய மத்திய அரசுக்கு வன்மையான கண்டனம். சென்னையில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.10 உயர்ந்து 103.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.3.08 உயர்ந்து 95.47க்கும் விற்பனை ஆகிறது. ஆட்டோ, கால்டாக்சி, டெலிவரி ஊழியர்கள் இந்த விலையுயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறையால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் லாபம் பார்த்த மத்திய அரசு இப்போது விலையுயர்ந்தபோது அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்தியுள்ளது.
இதன் தாக்கம் தொடர்வினையாகப் பல்வேறு தொழில்களிலும் எதிரொலிக்கும். சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயமுள்ளது. தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது மத்திய அரசு. உடனடியாக இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் எனக் கோருகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.