

சென்னை,
பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உடற்கல்வி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்றும், அதற்கான பாடவேளைகள் ஒதுக்கப்பட்டாலும், அதில் பிற பாட ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு சமீப காலங்களாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, பள்ளிக்கல்வித்துறை வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக நடந்த ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த உத்தரவு வந்திருக்கிறது. அதில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ- மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், சிறப்பு விளையாட்டுகள் குறித்து பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும், உடற்கல்வி ஆசிரியர்கள் அவர்களுக்கான பாட வேளைகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும், பிற பாட ஆசிரியர்களுக்கு அந்த பாடவேளையை தாரை வார்க்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாணவ-மாணவிகளுக்கும். உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக வலம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.