

சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான மறுசீரமைப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக, ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பார்சல் பிரிவுக்கான புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்முதல் கட்டமாக, நடைமேடை 1 முதல் 5 வரையிலான பகுதிகளில் 18 மீட்டர் அகலமும், 120 மீட்டர் நீளமும் கொண்ட புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.
இந்த கட்டுமான பணிகளின் காரணமாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டன. தற்போது அந்த நடைமேடைகளில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதால், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் எழும்பூர் நிலையத்திலிருந்தே வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, மின்சார ரெயில் நடைமேடைகளிலும் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட்டன. தற்போது இந்த நடைமேம்பாலத்திற்கான பிரம்மாண்டமான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, நடைமேடை 1 முதல் 11 வரையில் புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.எஞ்சிய கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இந்த கட்டுமானப் பணிகள் காரணமாக இரவு நேர மின்சார ரெயில்கள் வருகிற 6-ந்தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அந்த தேதிக்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.