கேரளாவில் இருந்து அன்னாசி பழங்கள் வரத்து அதிகரிப்பு

திருவாரூர் மாவட்டத்துக்கு கேரளாவில் இருந்து அன்னாசி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளது.
கேரளாவில் இருந்து அன்னாசி பழங்கள் வரத்து அதிகரிப்பு
Published on

திருவாரூர் மாவட்டத்துக்கு கேரளாவில் இருந்து அன்னாசி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளது.

அன்னாசி பழங்கள்

கோடையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இடையிடையே மழை பெய்தாலும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். வெயில் காலத்துக்கு உகந்த பழங்களை பொதுமக்கள் தேடித்தேடி வாங்கி செல்கின்றனர்.

இதன் காரணமாக பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. பழங்களில் மக்கள் அதிகம் விரும்பும் பழமான அன்னாசி பழங்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.

கேரளாவில் விளைச்சல் அதிகரிப்பு

திருவாரூர் மாவட்டத்துக்கு கொல்லிமலை, தேனி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இருந்து அன்னாசிப்பழம் வருவது வழக்கம். கேரளாவில் விளைச்சல் அதிகரித்தால் கூடுதலான பழங்கள் விற்பனைக்கு வருவது வாடிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டு கேரளாவில் அன்னாசி பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் திருவாரூர் மாவட்டத்துக்கு கேரளாவில் இருந்து அன்னாசி பழங்கள் வரத்து அதிகமாக உள்ளது.

ரூ.25-க்கு விற்பனை

விளைச்சல் அதிகரித்து, வரத்து அதிகமாக உள்ளதால் அன்னாசி பழங்கள் விலையும் வெகுவாக சரிந்துள்ளது. ஒரு பழம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையாகி வந்த அன்னாசி பழங்கள், தற்போது ஒரு பழம் ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அன்னாசி பழத்தின் விலை குறைந்துள்ளதால் அதை வாங்குவதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது. வரத்து அதிகமாக இருக்கும் வரை விலை சரிவடைந்து காணப்படும். ஜூலை மாதம் வரை வரத்து அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதுவரை தற்போது உள்ள விலையே நீடிக்கும் என விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com