

சென்னை,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த உயர் கல்வித்துறை சார்பில் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. முதலில் அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து தேவையான ஆவணங்களை கேட்டுப் பெற்ற விசாரணை ஆணையம், அதன் தொடர்ச்சியாக சூரப்பா மீது ஊழல் புகார் தெரிவித்தவர்களிடம் விசாரணை நடத்தியது.
இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. அவர் மீதான விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து, விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தேர்தல் வந்துவிட்டதால், விசாரணையில் சற்று தாமதம் ஏற்பட்டது. சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைந்தாலும், விசாரணைக்கு அழைத்தால் அவர் வந்துதான் ஆகவேண்டும். இன்னும் 5 பேரிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது. அந்த பணிகளை 10 முதல் 15 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதன் பின்னர், விசாரணை குறித்த அறிக்கை தயார்செய்து அரசுக்கு தெரிவிக்கப்படும். விசாரணை அறிக்கை மீது அரசு சில முடிவுகளை எடுத்து கவர்னரிடம் தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.