நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு

மின்தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர். இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்வதாக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறு தேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும் எனவும், மாணவர்களின் வழக்கு தகுதியானதாக இல்லை என்றும் கூறி வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com