பிளஸ்-2 பொதுத்தேர்வு: மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள் என்று கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுத இருக்கின்றனர். இந்த தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இரவு நன்றாக உறங்குங்கள். உங்கள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள். முன்கூட்டியே தேர்வு மையத்தை அடையவும். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து, உங்களுக்கு எளிதாகத் தெரிந்தவற்றுக்கு விடை எழுதத் தொடங்கவும்.
ஒரு கேள்வி சவாலானதாக உணர்ந்தால், ஆழமாக பெரு மூச்சு விட்டு, சில நொடிகள் அமைதி காத்தால் - தெளிவாகும் நமது மனம் விடைகளை கண்டுபிடிக்கும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் மாணவ, மாணவியர்களுக்கான உங்களுடைய உணர்வுபூர்வ ஆதரவு முக்கியமானது. தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






