மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவருடய மகள் சவுமியா என்ற கிஷோர்னி (வயது 17). வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதினார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வில் சவுமியா தேர்ச்சி பெற்றார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனவருத்தத்தில் இருந்தார்.

இதனால் மாணவி சவுமியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது பூசேரி. இந்த ஊரை சேர்ந்தவர் சத்யா (17). ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாக கருதிய சத்யா மனம் உடைந்து விஷம் குடித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சத்யா அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com