நாளை பிரதமர் மோடி வருகை: தூத்துக்குடியில் வாகன போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாளை பிரதமர் மோடி வருகை: தூத்துக்குடியில் வாகன போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் மிகமுக்கிய நபர்களின் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.
Published on

பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி விமான நிலையம் புதுப்பிக்கப்பட்ட புதிய முனையம் திறப்பு விழாவிற்கு நாளை (26.7.2025, சனிக்கிழமை) பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மேற்கொள்ளப்படும் போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சம்மந்தமாக பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் 26.7.2025 அன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையில் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் எந்த ஒரு கனரக (Heavy Vehicle's) மற்றும் சரக்கு வாகனங்களும் செல்வதற்கு அனுமதி கிடையாது. குறிப்பாக வாகைகுளம் விமான நிலையத்தை கடந்து செல்வதற்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

மேலும் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி அல்லது ஸ்ரீவைகுண்டம் செல்லும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்தை கடந்து செல்ல முடியாத பட்சத்தில் அவைகள் மங்களகிரி விலக்கில் வலது புறமாக திரும்பி மேல கூட்டுடன்காடு, அல்லிகுளம், பேரூரணி, திம்மராஜபுரம், வர்த்தகரெட்டிபெட்டி, வாகைகுளம் ஜங்ஷன் வழியாக செல்லவும்.

அதே போல் திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வரும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்தை கடந்து செல்ல முடியாத பட்சத்தில் அவைகள் வாகைகுளம் ஜங்ஷன், வர்த்தகரெட்டிபெட்டி, திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், மேலகூட்டுடன்காடு, மங்களகிரி விலக்கு வழியாக செல்லவும்.

நிகழ்ச்சி நடைபெறும் அன்று நிகழ்ச்சிக்கு வருகை தரும் மிகமுக்கிய நபர்களின் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.

மேலும் அன்றைய (26.7.2025) தேதியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயண நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு (Arrive 3 Hours early) முன்பாக விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Pass Holders வாகனங்கள் வாகைகுளம் Toll Gate அருகில் உள்ள வேலவன்நகர் வழியாக சென்று, Pass Holders-க்கான வாகன நிறுத்தத்தில் நிறுத்தவும். அதே போல் நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையம் செல்லும் மெயின் Entrance-ன் வலதுபுறம் (மேற்கு பகுதி) மற்றும் இடதுபுறம் (கிழக்கு பகுதி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் நிறுத்திவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லவும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com