

சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில், இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கொரோனா தொற்று காரணமாக கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஜூன் 3 ஆம் தேதி என்பது, தமிழுக்கு ஏடு திறந்த நாள் என்றும் பகுத்தறிவுக்குப் பிள்ளை பிறந்த நாள் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள கவிதை;-
கலைஞர் பிறந்தநாள்
தமிழுக்கு
ஏடு திறந்தநாள்
தமிழர்க்குச்
சூடு பிறந்தநாள்
பகுத்தறிவுக்குப்
பிள்ளை பிறந்தநாள்
பழைமை லோகம்
தள்ளிக் களைந்தநாள்
மேடை மொழிக்கு
மீசை முளைத்தநாள்
வெள்ளித் திரையில்
வீரம் விளைத்தநாள்
வள்ளுவ அய்யனை
வையம் அறிந்தநாள்
வைரமுத்துவின்
ஆசான் பிறந்தநாள்
மேற்கண்ட கவிதையை கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.