போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்ம சாவு

வள்ளியூரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்தார்.
போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்ம சாவு
Published on

நெல்லை,

குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 56). இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கூடங்குளம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கிறிஸ்டோபர் குமரி மாவட்டம் தக்கலை அருகே பூமத்திவிளையை சேர்ந்த லீலாபாய் (55) என்பவருடன் செல்போனில் அடிக்கடி பேசியதாகவும், அவரது வீட்டுக்கு வந்து தங்கி செல்வதாகவும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார், லீலாபாய் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால் அங்கு கிறிஸ்டோபர் இல்லை.

இதையடுத்து லீலாபாயை மேல் விசாரணைக்காக வள்ளியூர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் லீலாபாய் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். உடனே அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் போலீஸ் வாகனத்தில் லீலாபாயை ஏற்றி அவரது சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உடல்நிலை மோசமாகவே, உடனே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு லீலாபாயை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லீலாபாயின் கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com