பேருந்து நிலையத்துக்குள் சென்றுவராத பஸ்களின் டிரைவர் மீது போலீசில் புகார்

நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்துக்குள் சென்றுவராத பஸ்களின் டிரைவர் மீது போலீசில் புகார் அளிக்கும்படி அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பேருந்து நிலையத்துக்குள் சென்றுவராத பஸ்களின் டிரைவர் மீது போலீசில் புகார்
Published on

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஜம்புலிங்க பூங்காவில் காலை சிற்றுண்டி தயாரிப்பதற்காக கட்டிடம் கட்டும் பணியையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிட அமைப்பு சரியான முறையில் இல்லை. எனவே அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கவுன்சிலர் சத்யா என்பவர் நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வருவதில்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையாவிடம் தெரிவித்தார்.

போலீசில் புகார்

இதையடுத்து அவர் நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் சென்று வரவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது போலீசில் புகார் அளிக்கும்படி அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு புதிதாக கமிஷனர், மேலாளர், நகரமைப்பு அலுவலர், துப்புரவு அலுவலர் ஆகியார உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும் நெல்லிக்குப்பம் 30 வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா, நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, பொறியாளர் பாண்டு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com