

மதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் சண்முகசுந்தரம் முன்ஜாமீன் கோரி, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு இருமுறை தள்ளுபடியானது. தனிப்படை காவலர்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரிக்கவும், வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனிடையே, இந்த வழக்கில் இருந்து தனது பெயரை நீக்க கோரி காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த மனு தொடர்பாக சி.பி.ஐ. பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.