

திருநெல்வேலி,
செப்டம்பர் 6-ம் தேதி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் “அரச காவல்” என்ற ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது.
செப்டம்பர் 6-ம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கிய “அரச காவல்” என்ற குறும்படம் வெளியிடப்பட்டது.
ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரன் எழுதி, தயாரித்து, இயக்கிய இந்த குறும்படம் காவல்துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையை எடுத்துரைக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் ஆகியோர் குறும்படத்தை வெளியிட்டு, படக்குழுவினரைப் பாராட்டினர். தயாரிப்பாளர்-இயக்குநர் சுபாஷ் சந்திரன், ஒளிப்பதிவாளர்கள் ராஜா, மாரியப்பன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.