காவலர் தினம்: தூத்துக்குடியில் வாகன விழிப்புணர்வு பேரணி- எஸ்.பி. துவக்கி வைத்தார்

காவலர் தினத்தை முன்னிட்டு வல்லநாடு துப்பாக்கி சுடுதள வளாகத்தில் நடந்த மரம் நடுவிழாவிற்கு தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நட்டினார்.
காவலர் தினம்: தூத்துக்குடியில் வாகன விழிப்புணர்வு பேரணி- எஸ்.பி. துவக்கி வைத்தார்
Published on

1859-ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழகத்தில் காவலர் தினம் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்திற்கு சென்று காவலர் தின உறுதிமொழி ஏற்றும், பின்னர் துப்பாக்கி சுடுதள வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்ட மரம் நடுவிழாவிற்கு தலைமை தாங்கியதோடு, அவரும் மரக்கன்றுகள் நட்டு காவலர் தினத்தை சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து காவலர் தினத்தை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பாக இருந்து 14 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 15 இருசக்கர காவல்துறை வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேற்சொன்ன நிகழ்வுகளின் போது தூத்துக்குடி காவல்துறை ஏ.டி.எஸ்.பி.க்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. சுதிர், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com