

ஆத்தூர்:-
ஆத்தூர் புதுப்பேட்டை வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் சையது நியாஸ். டி.வி. மெக்கானிக்கான இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அதேநேரத்தில் வீட்டில், சையது நியாசின் மகன் முகமது அஸ்லாம் (வயது 19) மட்டும் தனியாக இருந்தார். கடந்த 14-ந் தேதி இரவு இவரது வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் முகமது அஸ்லாமை அடித்து உதைத்து கட்டி போட்டுவிட்டு வீட்டில் இருந்த பணம் ரூ.20 ஆயிரம், 4 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம் பெருமாம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் சரத்குமார் (25), மேட்டூர் தாலுகா கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த குணசேகரன் (24), கார்த்திக் (21) ஆகிய 3 பேரையும் விசாரிக்க முடிவு செய்தனர். இதில் குணசேகரன் கோவை மத்திய சிறையிலும், சரத்குமார், கார்த்திக் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும் வேறொரு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீஸ் காவலில் எடுத்து அவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள சையது நியாஸ் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கூறிய தகவலின்பேரில், 4 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் மீட்கப்பட்டன.