

சேலம்,
சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் பெண் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் புவனேஸ்வரி. இவருடைய கணவர் பெருமாள். சமீபத்தில் தனது கணவர் பெருமாளின் பிறந்தநாளை அவரது மனைவி சிறப்பாக கொண்டாடினார்.
அப்போது நடுரோட்டில் பிறந்த நாள் பரிசாக புவனேஸ்வரி தனது கணவருக்கு பெரிய அளவிலான தங்க சங்கிலியை அணிவிக்கிறார். தொடர்ந்து பெருமாள் தனது மனைவியை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
மேலும் பிறந்த நாளில் கணவருக்கு 15 பவுன் தங்க சங்கிலியை பரிசாக அளித்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், கணவருக்கு தங்க சங்கிலி அணிவித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு பெண் போலீஸ் ஏட்டுக்கு நோட்டீஸ் அனுப்பும் படி உத்தரவிட்டார்.
அதன்பேரில் பெண் போலீஸ் ஏட்டு புவனேஸ்வரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) அனுப்பப்பட்டு உள்ளது. அவர் கொடுக்கும் விளக்கத்தின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.