

ஆன்லைன் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
நிதி நிறுவனம்
சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்ற ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கி அதில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நாட்களில் பணம் இரட்டிப்பாக்கி தரப்படும் என்று அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்து உள்ளனர். முதிர்வு காலம் முடிந்த பின்னர் பணத்தை திருப்பி தராததால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
புகார் அளிக்கலாம்
எனவே மேற்படி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டு பணத்தை திரும்ப பெறாத பொதுமக்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் சிவகங்கை நகர் திருப்பத்தூர் மெயின் ரோடு, நாகு நகரில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் கொடுக்கலாம்.
அந்த புகாரின்பேரில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.