ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை

சீருடையில் இருந்த ஏடிஜிபி ஜெயராமனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிறுவன் கடத்தல் சம்பவத்தில் ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் நேற்று பிற்பகல் ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் ஆஜராகினர். அப்போது, இந்த கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயரானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் இருப்பதால் அவரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சீருடையில் இருந்த ஏடிஜிபி ஜெயராமனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. ஏடிஜிபி ஜெயராமன் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.






