

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண்மணி ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் அந்த 2 ½ வயது சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து திடிரென அச்சிறுவனை அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பெட்டிக்கடையில் இருந்த குழந்தையின் தாயார் உடனடியாக சத்தம் போட்டுள்ளார். மேலும் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா, தலைமை காவலர்கள் ராமச்சந்திரன், செந்தில்குமார் மற்றும் ஜெபக்குமார் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு குலசேகரன்பட்டினம்- திருச்செந்தூர் சாலையிலுள்ள ஒரு கோயிலின் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட குழந்தையுடன் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை மடக்கி பிடித்து கடத்தப்பட்ட 2 ½ சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
மேலும் அந்த தம்பதியினரையும் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த லிங்கதுரை (வயது 35) மற்றும் அவரது மனைவி ஜெயந்தி(33) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்சொன்ன சம்பவத்தில் குழந்தை கடத்தப்பட்ட 30 நிமிடங்களில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டு, குழந்தையை கடத்திய தம்பதியினரை கைது செய்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.