

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, திரைமறைவில் அரங்கேறிய சதித் திட்டம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப்போட வேண்டும் என ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு புகார் மனுவை சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்தார்.
இதையடுத்து சென்னை மற்றும் கரூர் பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த சதித்திட்டத்தில் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரரு ம் பின்னணியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே அவர்கள் இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். அதற்கான நோட்டீசை கரூரில் உள்ள வீட்டிற்கு சென்று அவர்களது தந்தையிடம் நேரில் ஒப்படைத்தனர்.
அதன்படி நேற்று காலை 10.30 மணிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு வரவில்லை. அவர்களது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆகவே சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகி வருகிறார்கள்.
பொதுவாக 3 முறை சம்மன் அனுப்பப்படும். இவற்றுக்கு பதில் இல்லாவிட்டால் அந்த நபரை கைது செய்ய முடியும். அதே நேரத்தில் மீண்டும் சம்மன் அனுப்பாமலேயே கைது நடவடிக்கையில் இறங்கமுடியும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகவே அவர்கள் இருவரையும் கைது செய்யும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர். ஒருவேளை கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அவர்கள் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆகவே இந்த மாநிலங்களுக்கு தனிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிவிடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் முக்கிய விமான நிலையங்களில் தமிழக உளவுப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.