சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாளை மறுநாள் போலியோ சொட்டு மருந்து முகாம்

குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முறையாக கொடுத்திருந்தாலும், முகாமில் அவசியம் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாளை மறுநாள் போலியோ சொட்டு மருந்து முகாம்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை மறுநாள்(28-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்

“இந்தியாவில் தீவிர கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் கடந்த 29 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் (28.06.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,641 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தபடவுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக அறிவித்துள்ள போதிலும், அண்டைநாடுகளில் போலியோ தாக்கம் இருப்பதால் போலியோ நோய் கிருமி பரவும் அபாயம் உள்ளது.

இதனால், இந்த வருடமும் போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும், பொதுமக்கள் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டுமருந்து மையத்திற்கு சென்று, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள அறிவுறுத்தபடவுள்ளது.

எந்த தீங்கும் கிடையாது

சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவுடன் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து போடுவதால் எந்தவித தீங்கும் கிடையாது.

ஆகவே அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து ஒரே நாளில் போட்டுக்கொள்வதன் மூலம், போலியோ நோய் பரவும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுசூழலிருந்து அறவே ஒழிக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முறையாக கொடுத்திருந்தாலும் 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் அவசியம் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போட்டுக்கொள்ள வேண்டும். முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் மாற்று மருந்து அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்

தீவிர போலியோ சொட்டு மருந்து 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி நகர சமுதாய நலவாழ்வு மையங்கள், நகர ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மெரினா கடற்கரை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.

மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம் காரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள், இந்த நாளில் அதாவது 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறவுள்ளனர். அதுமட்டுமின்றி 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். சொட்டுமருந்து முகாம்களில், சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 6,564 நபர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்தினை போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆய்வு

இன்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், பாலவாக்கம் அரசு ஆதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ள தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் மற்றும் மாநகராட்சி பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் போலியோ சொட்டு மருந்து மையங்களின் விவரம்

மக்கள் தொகை - 79,12,485

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 5,56,877

மையங்களின் எண்ணிக்கை (நிரந்தரம்) - 1,435

பேருந்து நிலையங்கள் மற்றும் இதர மையங்கள் - 154

நடமாடும் மையங்கள் - 52

மொத்த மையங்கள் - 1,641

X

Daily Thanthi
www.dailythanthi.com