

பொள்ளாச்சி,
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கள்ளத்தொடர்பு விவகாரம் விசாரனைக்கு வந்தவரிடம் ஐந்தாயிரம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுமாறு தலைமை காவலர் ஆடியோ வைரல்.
பொள்ளாச்சியை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டு, இருவரும் கோவையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு கணவன் அந்த பெண்ணை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இதை தொடர்ந்து முகேஷ் பிரச்சனை செய்ததால், கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் பிரச்சினைக்கு காரணமான முகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் விசாரணை மேற்கொண்டு, இனிமேல் பிரச்சினை செய்யக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர், முகேஷிடம் காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கியுள்ளார். லஞ்சம் வாங்கியது வெளியில் தெரியவரவே, சிறிது நேரத்திலேயே தொலைபேசியில் முகேஷை தொடர்பு கொண்ட தலைமை காவலர் நாகராஜன், "உதவி ஆய்வாளர் ஜான்சன் நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சொன்னார்; நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" எனக் கேட்டு முகேஷிடம் பேசியுள்ளார்.
அதற்கு முகேஷ், "நான் வெளியில் இருக்கிறேன், காலையில் கோவை சென்றுவிடுவேன், இப்போது வர முடியாது" எனக் கூறுகிறார். தொடர்ந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு தலைமை காவலர் வற்புறுத்தவே, "காலில் வேண்டுமானாலும் விழுகிறேன், கொடுத்த பணம் கொடுத்ததாகவே இருக்கட்டும், பணம் எனக்கு வேண்டாம், இந்த பிரச்சினையிலிருந்து எனக்கு தீர்வு கிடைத்தால் போதும்" எனக் கூறுகிறார்.
திருமணம் ஆகவில்லை எனக்கூறி தான் அந்த பெண் என்னிடம் பழகினார். இனிமேல் நான் எந்த பிரச்சினைக்கு வரமாட்டேன் என முகேஷ் புலம்பும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.