

சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று 27 துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் விவாதத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் ராஜாராம் ஆகியோர் பேசினார்கள்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பொள்ளாச்சி நகராட்சி வருகிற நவம்பர் மாதம் நூற்றாண்டை கொண்டாடுகிறது. இதற்கு ரூ.100 கோடி சிறப்பு நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்க வேண்டும். பொள்ளாச்சி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலளித்து பேசும்போது, மாவட்டங்களை பிரிப்பது அரசின் கொள்கை முடிவு. இதுகுறித்து முதல்-அமைச்சரின் பரிசீலினைக்கு எடுத்து செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.