அம்மிக்கல்லை தலையில் போட்டு பாலிடெக்னிக் மாணவி கொலை ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்

அம்மிக்கல்லை தலையில் போட்டு பாலிடெக்னிக் மாணவி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதலால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அம்மிக்கல்லை தலையில் போட்டு பாலிடெக்னிக் மாணவி கொலை ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்
Published on

திருவாரூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் மவுலிகா (வயது18). திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள தனது பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி தஞ்சையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடைய உறவினரான திருக்களாரை சேர்ந்த சிவசங்கரன் (28) மவுலிகாவை ஒருதலையாக காதலித்து வந்தார். இவர் தம்பிக்கோட்டை ஜாம்புவானோடை பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சிவசங்கரன், மவுலிகாவை திருமணம் செய்ய முடிவு செய்து, மவுலிகாவின் பெற்றோரிடம் பெண் கேட்டார்.

பெண் தர மறுப்பு

அப்போது மவுலிகாவின் பெற்றோர் பெண் தர மறுத்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிவசங்கரன் நேற்று முன்தினம் இரவு ராஜகுமாரி வீட்டுக்கு சென்று அங்கு தூங்கி கொண்டிருந்த மவுலிகாவின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டார். இதில் படுகாயம் அடைந்த மவுலிகா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

சத்தம் கேட்டு ஆட்கள் வருவதற்குள் சிவசங்கரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மவுலிகாவை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மவுலிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதனிடையே தம்பிக்கோட்டை பகுதியில் பதுங்கி இருந்த சிவசங்கரனை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சிவசங்கரன், அம்மிக்கல்லை தலையில் போட்டு மவுலிகாவை படுகொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com