1.86 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை விநியோகம் - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

கோப்புப்படம்
1.39 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு இன்று வரை 24,924 ரேஷன் கடைகளில் உள்ள 1,86,23,426 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ.5,587.02 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும், 1,39,06,292 வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும்” எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 8-ந்தேதி சென்னை, பட்ரோடு ரேஷன் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார். மேலும், துணை முதல்-அமைச்சர் சென்னை, சிந்தாதரிப்பேட்டை TUCS ரேஷன் கடையிலும், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 04.01.2026 முதல் 07.01.2026 வரை தொடர்புடைய ரேஷன் கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.
இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய ரேஷன் கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த டிஜிட்டல் மயமான காலகட்டத்தில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை ரொக்கமாக வழங்கிட கூட்டுறவுத் துறையின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தொய்வில்லாமலும், விரைவாக குறைந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிற தேசிய வங்கிகள் செய்ய முடியாததை, கூட்டுறவு வங்கி திறம்பட செய்து சாதித்துள்ளது.
11.1.2026 இன்று வரை 24,924 ரேஷன் கடைகளில் உள்ள 1,86,23,426 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 5587.02 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும், 1,39,06,292 வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






