பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ந்தேதி வரை நீட்டிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ந்தேதி வரை நீட்டிப்பு
Published on

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்துக்காக அரசு சார்பில் ரூ.249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் இலவச வேட்டி மற்றும் அதே எண்ணிக்கையில் இலவச சேலைகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 9ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், அன்று ஒருநாள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்றோடு நிறைவு பெறும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். இதனை பயன்படுத்தி, விடுபட்ட அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயன்பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜனவரி 18-ந்தேதி(இன்று) வரை 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com