பொங்கல் பரிசுப்பொருட்கள் தரமானதாக இல்லை:எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

பொங்கல் பரிசுப்பொருட்கள் தரமானதாக இல்லை என்று மக்கள் புகார் கூறுவதாக அவர் கூறினார்.
பொங்கல் பரிசுப்பொருட்கள் தரமானதாக இல்லை:எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
Published on

சேலம்,

தமிழகத்தில், மக்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஏற்கெனவே அறிவித்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் ரேஷன் கடைகள் மூலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மக்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் தரமானதாக இல்லை என்று அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

அவர் இதுகுறித்து கூறும்போது, தமிழகத்தில் பொங்கல் பரிசுப்பொருட்கள் மக்களுக்கு தரமற்றாதாக கொடுக்கப்பட்டு வருகிறது. ரவைகளில் வண்டுகள் இருப்பதாகவும், 21 பொருட்கள் கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 18 பொருட்கள் மட்டுமே கொடுப்பதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இரண்டரை டன் வெல்லம் மோசமாக இருக்கின்றது. சேலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் வெல்லமானது தரமற்று இருப்பதற்கான ஆதாரம் உள்ளது.

பொங்கல் பரிசுப்பொருட்கள் தரமற்று இருப்பதாக பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள் தெரிவித்து வருகின்றன. மக்களுக்கு கொடுக்கும் பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களே பொருட்கள் எடை குறைவாக இருப்பதாக போராட்டம் நடத்தியுள்ளனர். தரமற்ற பொருட்களால், மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

எனவே, மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுப்பொருட்களை அரசு தரமானதாக வழங்க வேண்டும். மக்களுக்கு தரமற்ற, கொட்டுப்போன பொருட்களை வழங்கக்கூடாது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com