

நாமக்கல்லில் உள்ள மோகனூர் சாலையில் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆவணி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக முருகனுக்கு பால், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் உள்பட 18 பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தங்ககவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நாமக்கல் கடைவீதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருக்கும் பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகையையெட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு முருகன் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.