பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை

தாத்தா வீட்டில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மரக்காணம்,

மரக்காணம் அருகே தாத்தா வீட்டில் இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சவுக்கு சங்கர் மகன்

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இவரது மனைவி ஆர்த்தி, சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் தியோ ஆழிசை (வயது 13). கருத்துவேறுபாடு காரணமாக சவுக்கு சங்கரும், ஆர்த்தியும் தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பத்தில் ஆர்த்தியின் பெற்றோர் உள்ளனர். அங்கு தாத்தா செந்தாமரைக் கண்ணன் மற்றும் பாட்டி கவனிப்பில் இருந்து சிறுவன் தியோ ஆழிசை, மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

தூக்கில் தொங்கிய சிறுவன்

தாய் மீதான ஏக்கத்தில் கடந்த சில நாட்களாக சிறுவன் சோகமாக இருந்துள்ளான். எனவே தாயார் ஆர்த்தியை பார்ப்பதற்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு சில நாட்கள் இருந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுவன் தியோ ஆழிசை நடுக்குப்பம் கிராமத்துக்கு அழைத்து வரப்பட்டான்.

நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்புமாறு பேரனிடம் தாத்தா, பாட்டி கூறிவிட்டு மற்ற வேலைகளை கவனித்தனர். வீட்டின் பின்பக்கம் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த தாத்தா, பாட்டி பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள வேப்ப மரத்தில் சிறுவன் தியோ ஆழிசை தூக்கில் தொங்கியவாறு இருந்தான்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிறுவனை மீட்டு மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தியோ ஆழிசை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com