வருங்கால முதல்-அமைச்சர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வருங்கால முதல்-அமைச்சர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
Published on

நெல்லை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை தமிழக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான திமுக சட்டசபை தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. அதேவேளையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் கட்சி பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யும், அதேபோல் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில், வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா அண்மையில் அறிவித்தார். மேலும்'எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திமுகவை வீழ்த்தவே பாஜகவுடன் கைகோர்த்தோம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா. எஸ். செல்வகுமார் பெயரில் நெல்லையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்றுள்ள 'வருங்கால முதல்வரே!' வாழ்த்துகிறேன்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது அதிமுக-பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com